Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புறவழிச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

டிசம்பர் 27, 2023 12:12

குமாரபாளையம், டிச. 27: குமாரபாளையம் அருகே புறவழிச்சாலையில் கடும்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலையில் கத்தேரி பிரிவு முதல் வளையக்காரனூர் எஸ்.எஸ்.எம். கல்லூரி வரை மேம்பாலம் அமைக்கும் பணியால், சாலைகள் அடைக்கப்பட்டு, சர்வீஸ் சாலை வழியாக வாகனங்கள் திருப்பி  விடப்பட்டு வருகின்றன. நேற்று பகல் 12:00 மணியளவில் அதிகப்படியான வாகனங்கள் வந்ததால், புறவழிச்சாலை மற்றும் சர்வீஸ் சாலை ஆகிய இரண்டிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகனங்கள் ஆங்காங்கே பல மைல் தூரம் நின்றன.

பின்னர் சிறிது, சிறிதாக நகர்ந்து வாகனங்கள் செல்லத் தொடங்கின. இங்கு போக்குவரத்து போலீஸ் ஒருவர் கூட நிற்காதது வாகன ஒட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாலம் கட்டுமான பணி நிறைவு பெறும் வரையில் சாலையின் இருபுறமும் ஷிப்ட் அடிப்படையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் போக்குவரத்து போலீஸ் நிறுத்தப்படவேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் சர்வீஸ் சாலை இருபுறமும் எதிர் திசையில் இருசக்கர வாகனங்கள், கார்கள் என பல வாகனங்கள் வருவதால், குறுகிய சாலையில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்து வரும் நிலையில், வாகன போக்குவரத்து மிகவும் சிரமமாக உள்ளது.

இருசக்கர வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் மிகுந்த அச்சத்துடன் தான் இந்த பகுதியை கடந்து வருகின்றனர். கத்தேரி ஊருக்கு செல்லும் சாலை எதிரில் பெரிய பள்ளம் இருந்தது. பெயரவில் மூடிவிட்டு வாகனங்களை திருப்பி விட்டதால், அந்த இடம் மேலும் பெரிய பள்ளமாக மாறியுள்ளது. இதனை சரி செய்தால் மட்டுமே வாகனங்கள் எளிதில் சர்வீஸ் சாலையில் செல்ல முடியும்.

தலைப்புச்செய்திகள்